File:Amuttu thamil.jpg

அ.முத்துலிங்கம் எனும் படைப்பாளி - (Appadurai Muttulingam)

இலங்கை கொக்குவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கும் பயணிக்கும் வாய்ப்பைப் பெற்ற இவர் தன் அனுபவங்களை சிறுகதைகளாகவும், கட்டுரைகளாகவும் தருபவர். ஏறத்தாழ இருபது வருடங்களாக உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் கடமையாற்றி தற்சமயம் ஓய்வுபெற்று தன் மனைவி கமலரஞ்சினியுடன் வசிப்பது கனடாவில். இவருடைய மகன் சஞ்சயனும், மகள் வைதேகியும் வசிப்பது அமெரிக்காவில்.


அ.முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'அக்கா' சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவருடைய முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். பத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் புத்தக வடிவில் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் லாப நோக்கற்ற குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்.


நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவருடைய பார்வை அதிசயமான கூர்மை கொண்டது என்றால் அவருக்கு தோன்றும் உவமைகள் இன்னும் தனித்தன்மையானவை. 'அந்தக் கண்கள் அபூர்வமாக இலுப்பக் கொட்டையை பிளந்ததுபோல இரு பக்கமும் கூராக இருந்தன.' இப்படி அவர் எழுதும் ஒவ்வொரு வசனமும் ஒரு படிமமாகவே மாறிவிடுகிறது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.


எழுதிய நூல்கள் விபரம்

1) அக்கா - சிறுகதைத் தொகுப்பு -1964 -பாரி நிலையம்.

2) திகடசக்கரம் - சிறுகதைத் தொகுப்பு - 1995- காந்தளகம்.

3) வம்சவிருத்தி -சிறுகதைத் தொகுப்பு - 1996- மித்ர வெளியீடு.

4) வடக்கு வீதி - சிறுகதைத் தொகுப்பு - 1998- மணிமேகலைப் பிரசுரம்.

5) மகாராஜாவின் ரயில் வண்டி - சிறுகதைத் தொகுப்பு - 2001 - காலச்சுவடு.

6) அ.முத்துலிங்கம் கதைகள் - சிறுகதைகள் முழுத்தொகுப்பு - 2004- தமிழினி.

7) அங்கே இப்ப என்ன நேரம்? கட்டுரைத் தொகுப்பு - 2005- தமிழினி.

8) தற்கால வட அமெரிக்க கதைகள் - மொழிபெயர்ப்பு - தொகுப்பாசிரியர் அ.முத்துலிங்கம் - அச்சில் தமிழினி.


பரிசுகளும், விருதுகளும்

1) தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு - 1961

2) கல்கி சிறுகதைப் போட்டி பரிசு

3) ஜோதி விநாயகம் பரிசு - 1997

4) திகடசக்கரம் - லில்லி தேவசிகாமணிப் பரிசு - 1995

5) வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு - தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு - 1996

6) வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு - இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு - 1996

7) வடக்கு வீதி - சிறுகதைத் தொகுப்பு - இலங்கை அரசு சாகித்தியப் பரிசு - 1999

8) கனடா தமிழர் தகவல் - நாற்பது வருட தமிழ் இலக்கியச் சாதனை விருது - பிப்ரவரி 2006


மற்ற எழுத்தாளர்கள் கூறியவை:

1) ஜெயமோகன்

நவீன உலகம் ஓர் ஒற்றைப் பிராந்தியமாக சுருங்கி வருகிறது. மானுடம் ஒற்றை இனமாக ஆகலாம் - இன்று இது ஒரு கனவாக இருப்பினும். நவீன வாழ்வு தன் அபரிமிதமான வசதிகள் மூலம் உலகையே நாடாகக் கொண்ட ஒரு கதைபாடிக் குலத்தை உருவாக்கலாம். மண்ணெல்லாம் அலைந்து அவர்கள் மானுடத்தின் கதையைப் பாடலாம். இன்று நாம் அதற்கு போகவேண்டிய தூரம் மிக அதிகம்தான். ஆயினும் அதற்கு முதற்கட்ட முன்னுதாரணமாக ஆகும் சில எழுத்தாளர்களையாவது இன்று நாம் உலக இலக்கியத்தில் இருந்து காட்ட முடியும். தமிழில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தில் அதற்கான கூறுகள் உள்ளன என்று படுகிறது. அதுவே அவரது முதற் சிறப்பாகும். 'அ.முத்துலிங்கம் கதைகள்' தொகுப்பு பின்னட்டையில்.


2) க. மோகனரங்கன்

'இசை தரும் மயக்கத்தை அனுபவிப்பது ஒன்று, அர்த்தத்தை அறிந்து ரசிப்பது வேறு, இசையின் சூட்சுமத்தை உணர்ந்து அனுபவிப்பது இன்னொரு வகை, இந்த மூன்றும் கலந்த நிலையில் ஏற்படும் பரவசம் தனி.' இம்மூன்றும் பொதிந்திருக்கும் கதைகள் ஏராளமாக இத்தொகுப்பில் இருக்கின்றன. மலர்கள் செடிகளுக்கு மட்டுமே தங்களைச் சூடிக்கொள்ளும் உரிமையை அளிப்பவை என்கிறான் ஜென் கவிஞன். ஜீவமலர்களிலேயே தேன் இருக்கமுடியும். பறித்த கணம் முதல் மலர் சருகாக ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் தலைவியின் கூந்தலில் மலர் செடியிலிருப்பதைப் போன்ற ஒளியுடனும், இனிமையுடனும் இருக்கிறது என்கிறான் சங்கக் கவிஞன். அவளுக்குள் விரிந்திருக்கும் காதலின் புறச்சின்னமாக அம்மலர் இருக்கிறது என்பதால் அது ஒரு போதும் தன் மணத்தையும் மதுவையும் இழக்க முடியாது. அனுபவங்களைப் பறிக்காமல் தொடுக்க இயலாது கதை சொல்லியால். தொடுத்த பின்பும் வாடாமல் அவை இருக்க வேண்டுமென்றால் அவை அவனது மாளாக் காதலின் புறச் சின்னங்களாக வேண்டும். முத்துலிங்கத்தின் மலர்களில் தேன் வற்றுவதேயில்லை. - 'அ.முத்துலிங்கம் கதைகள்' தொகுப்பு முன்னுரையில்.


3) காவலூர் ராஜதுரை

அ.முத்துலிங்கத்தின் கதைகளை எவ்வாறு வகைப்படுத்தலாமென எனக்கு விளங்கவில்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, லா.ச.ரா ஆகிய தமிழ்க் கதாசிரியர்கள் அனைவரின் கதை சொல்லும் பாங்கின் சங்கமம் போல அவரின் ஆக்கத்திறன் காணப்படுகிறது. ஆயினும் கதைப் புனைவு, பாத்திர வார்ப்பு, உவமான உவமேயங்களின் பிரயோகம், குறியீடுகள், வார்த்தைகளின் தெரிவு, கதைகளின் நிகழ்விடம் இவையாவும் தமிழுக்கே புதியவை. முத்துலிங்கத்தின் கதைகளைப் படித்த துணிவிலேதான் எஸ்.பொ 'நோபல் பரிசு பெறும் தகைமை இலங்கை எழுத்தாளர்களுக்கே உண்டு' என்று மார் தட்டினார் போலும். - மகாராஜாவின் ரயில் வண்டி விமர்சனம் - தென்றல் மார்ச் 2004.


4) எஸ்.பொன்னுத்துரை

தொடுக்கப்படும் மலர்கள் நளினமான சிரிப்பை எழுப்புபவை. அவற்றைத் தொடுக்கும் நாரிலே சோகச் சுருதி மண்டிக் கிடக்கிறது. இ•து அசாதாரண உபாயம். இதிலே வெற்றி பெற்றிருக்கிறார், நண்பர் திரு அ. முத்துலிங்கம். - வம்சவிருத்தி 1996.


5) [கி.ராஜநாராயணன்]

சிறுகத வடிவம் உடைந்து, மறுவடிவம் எடுப்பது என்பது இப்படித்தான், புதுக்கவிதை போல. - வம்சவிருத்தி 1996


6) [பேராசிரியர் க.கைலாசபதி]

கடந்த பத்தாண்டுக் காலத்திற்குள் ஈழத்திலே தோன்றிய தரமான சிறுகதை எழுத்தாளர்களுள் திரு முத்துலிங்கமும் ஒருவர். அத்தகைய எழுத்தாளர் ஒருவரை ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டு கொண்டதில் நான் எப்பொழுதுமே பெருமைப் படுவதுண்டு. வயதில் எனக்கு இளைஞரான ஆசிரியர் கடந்த சில ஆண்டுகளாக என்னுடன் நெருங்கிய நட்புறவு கொண்டுவந்துள்ளார். அவரது சில கதைகள் பற்றி எனக்கு கருத்து வேறுபாடுண்டு. ஆனால், அவரது இலக்கிய ஆர்வமும், திறமையும், மென்மையான உளப்பாங்கும் வேற்றுமையைக் குறைத்து ஒற்றுமையையே வளர்த்து வந்துள்ளன. எனவே, நண்பனொருவனைப்பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை. நூலைப்பற்றி வாசகர் நல்லெண்ணம் கொள்வராதலின் ஆசிரியரைப் பற்றியும் நல்லெண்ணங் கொள்வர் என்றே நினைக்கிறேன். - அக்கா தொகுப்பு அணிந்துரை (1964)


7) வளவ துரையன்

புலம் பெயர்ந்தோரின் படைப்புகளைப் படிக்கும் போதெல்லாம் எனக்குக் காற்றின் மூலம் விதை பரவும் என்று சிறு வயதில் படித்ததுதான் நினைவுக்கு வருகிறது. முற்றிய காய்கள் வெடிக்கும். விதைகள் காற்று வீசும் திசையில் அடித்துச் செல்லப்படும். எங்கே போய் விழுகிறதோ அம்மண்ணில் ஊன்றி அந்த விதை அங்கே தன் குலத்தை புதுப்பிக்கும். இதுபோல்தான் அரசியல் வற்புறுத்தலினாலும், பொருள் தேடும் சூழலினாலும், படைப்பாளிகள் பலர் மாநிலம் விட்டு மாநிலம் என்றும், நாடு விட்டு நாடு என்றும் குடிபுக நேர்கிறது. தம் சுயத்தை இழந்துவிடாமல் அங்கே கிடைக்கும் அநுபவங்களை அவர்கள் படைப்பாக்குகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் அ. முத்துலிங்கம்.......படைப்பாளன் எங்கு சுற்றினாலும் தன் அடையாளத்தை இழக்காமல் இருப்பது புரியவைக்கப் படுகிறது. அதனால்தான் படைப்பும் வெற்றிபெற படைப்பாளனும் பாராட்டப்படுகிறான். - மகாராஜாவின் ரயில் வண்டி விமர்சனம் - திண்ணை இணையதளம்.


8) நுர்வ் மார்க்கீவ்

சிறகடிக்கும் அனுபவங்களும், ஆர்வப் பகிர்வும் கைகோர்த்து அழைத்துச் செல்லும் பொறுமையும் முத்துலிங்கத்தை ஒரு முழுமையான படைப்பாளியாக்குகின்றன. இந்த தொகுப்பை தவறவிடும் தீவிர வாசகன் பெயர்புலங்களின் உன்னதங்களை விளிக்கும் புதிய தமிழிலக்கியக் கூறினை இழப்பான் என்பது நிச்சயம். தங்கள் படிப்பாலும், பரப்பாலும் விரிந்த புதிய தமிழ் படைப்பாளிகள் காணாத உலகங்களுக்குத் தமிழ் வாசகனை இட்டுச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் முத்துலிங்கம் ஒரு முன்னோடி. - மகாராஜாவின் ரயில் வண்டி விமர்சனம் - திண்ணை இணையதளம்.


9) வாஸந்தி

மகாராஜாவின் ரயில் வண்டி என்ற தலைப்பு கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்தபோது உண்மையிலேயே ஒரு சுகமான பயணத்தை முடித்த உணர்வு ஏற்பட்டது. சொகுசான, இதமான பயணம். களைத்துப்போன மனத்துக்கு, நிராசையால் ஏக்கம் கப்பிய உள்ளத்துக்கு இறகு நுனியின் மிருதுத் தன்மையோடு வருடும் இதம். வண்டியின் சாளரங்கள் பல அதிசயங்களைக் காண்பிக்கும். நாம் பார்த்திருக்கும், வளையவரும் சாமானிய உலகம் புது வர்ணங்களை வெளிப்படுத்தும். அங்கு பறவைகள், மிருகங்கள், பட்டாம்பூச்சிகள் வித்தியாசம் இல்லாமல் நம் உணர்வுகளோடு ஐக்கியமாகும். அவசரம் காட்டாமல், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவையும் பிரமிப்புடன் பயணம் நெடுகிலும் மிகுந்த அக்கறையுடன், நட்புடன் நமக்கு காண்பித்துக்கொண்டு செல்கிறார் தொகுப்பின் ஆசிரியர் அ.முத்துலிங்கம். - மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுப்பு விமர்சனம் - இந்தியா டுடே, செப்டம்பர் 4, 2002.


10) [அம்பை]

அ.முத்துலிங்கத்தின் கதைகள் நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத பாதைகளில் இட்டுச் செல்பவை. நாம் அறியாத உலகங்களின் கதவுகளையும், சாளரங்களையும் ஓசைப்படுத்தாமல் மெல்லத் திறப்பவை. - மகாராஜாவின் ரயில்வண்டி பின்னட்டை வாசகம்.


11) எம்.வேதசகாயகுமார்

முத்துலிங்கம் என்ற மனிதனின் புகலிடத் தேடல் முத்துலிங்கம் என்ற படைப்பாளியின் அனுபவ உலகின் எல்லையைப் பெருமளவு விரித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய அனுபவங்களைத் தாய்மொழிப் படைப்பினூடாக வாசக மனம் பெறமுடிந்துள்ளது. மொழிபெயர்ப்புகளும் ஓர் எல்லைவரை இதைச் சாத்தியமாக்கக்கூடும்தான். ஆனால் மூல மொழிப் படைப்புடனான ஒப்பிடலில் இதன் எல்லை மிகக் குறுகலானது.

முத்துலிங்கத்தின் 'ஒட்டகம்' கதையினை உலகளாவிய அனுபவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிட வேண்டும். அந்த சோமாலியப் பெண் தன் காதலனை மணக்க வாய்ப்பிருந்தும் தானாக ஒரு கிழவனுக்கு மூன்றாம் தாரமாக வாழ்க்கைப்பட சம்மதித்து விடுகிறாள். கிழவனின் ஊரில் கொட்ட கொட்ட ஊற்றெடுக்கும் தண்ணீர் இதன் காரணமாக அமைந்துவிடுகிறது. தண்ணீருக்காக காதலைத் துறப்பது தமிழ் அனுபவ உலகில் வியப்பூட்டுவதுதான். ஒருவகையில் உடன்பாடு காண இயலாததுகூட. ஆனால் அந்த வாழ்வினூடாக இயங்கும் வாசகப் பயணம் இந்த வியப்பைச் சிதைத்து விடுகிறது. அந்த வாழ்வின் துக்கத்தை உணர்த்தி விடுகிறது. - காலம் நவம்பர் 2001 இதழில்.


12) பாவண்ணன்

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களுள் முக்கியமானவர் அ.முத்துலிங்கம். தமிழக வாசகர்களிடையேயும் கணிசமான அளவு கவனத்தைப் பெற்றவர். - அக்கா சிறுகதைத் தொகுதி பற்றி திண்ணையில்.


13) எஸ்.ராமகிருஷ்ணன்

அ.முத்துலிங்கம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். 1960 முதல் எழுதத் துவங்கிய இவர், தனது பணியின் காரணமாக சூடான், சுவீடன், அமெரிக்கா, பாகிஸ்தான், சியாரா எனப் பல்வேறு நாடுகளில் வேலை செய்தவர். தமிழ் செவ்வியல் இலக்கியங்களில் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவர். சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. இவரது முதல் சிறுகதைத் தொகுதி 'அக்கா' யாழ்ப்பாண வாழ்க்கையின் நுட்பங்களைப் பதிவு செய்தது. 'திகடசக்கரம்' 'மகாராஜாவின் ரயில்வண்டி' என்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கணிப்பொறித்துறை சார்ந்த ஆங்கில நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். 'முத்துலிங்கம் கதைகள்' என்ற பெயரில் இவருடைய முழுத் தொகுப்பும் வெளியாகி உள்ளது. - கதாவிலாசம் நூலில்.


14) பேராசிரியர் [கா.சிவத்தம்பி]

முத்துலிங்கத்தின் முக்கியத்துவம் இன்று தமிழில் புனைகதை எழுதும் ஒரு சர்வதேச நிர்வாகத்துறை மேலாளர் என்பதில் தங்கியிருக்கவில்லை. மாறாக, அந்தச் சர்வதேச அநுபவங்களை, குறிப்பாக வேறுபடும் பண்பாட்டு அநுபவங்களைத் தமிழில், புதுமைப்பித்தனை அடிக்கடி நினைவுறுத்தும் ஒரு நடையில் (பார்வையில்) தருபவர் என்பதிலேயே தங்கியுள்ளது. - குறிப்புகள் 10 அக்டோபர் 2001.


15) சுகுமாரன்

கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்கமுடியாது என்று ஒரு புத்தகத்தைப் பற்றிச் சொல்வது உயர்வு நவிற்சியாக இருக்கலாம். நாற்பத்தி எட்டு கட்டுரைகளடங்கிய இந்நூலை அப்படி பரிந்துரைப்பது மிக இயல்பான செயல் மட்டுமே.


நாம் அறிந்த மொழியில் நமக்கு அன்னியமான வெவ்வேறு உலகப் பகுதிகளைக் காட்டுகிறார் முத்துலிங்கம். ஈழத்தில் பிறந்தவர். பணியின் பொருட்டு உலக நாடுகள் பலவற்றிலும் வசித்தவர். வெவ்வேறு நாடுகளின் பின்னணியிலான அனுபவங்களை முன்வைக்கும் போதும் முதன்மையாக இருப்பது மனித இயல்பு சார்ந்த அக்கறைகள் மட்டுமே. இந்த அக்கறை அவரது எழுத்துக்குப் புலம் கடந்த விரிவைத் தருகிறது. முகங்களும், மொழியும், கலாச்சாரமும் வேறுபட்டதாக இருந்தாலும் மனித மனத்தின் பொது இயல்புகள் அநேகமாக ஒற்றுமை கொண்டவை என்ற உணர்வு கட்டுரைகளை வாசிக்கையில் தவிர்க்கவியலாமல் எழும்.


எழுதியவரையும், வாசிப்பவரையும் ஒரே விதத்தில் கௌரவிக்கும் முறையில் நூலை நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது தமிழினி. - 'அங்கே இப்ப என்ன நேரம்' நூல் மதிப்புரை - தினமணி நாளிதழ், 25 ஆகஸ்ட் 2005.


16) பி.ஏ.கிருஷ்ணன்

'அங்கே இப்ப என்ன நேரம்' மரணத்தின் அறனில்லாத் தேர்வு தரும் அதிர்ச்சியைப் பற்றிய கட்டுரை. புத்தகங்களை அடுக்கும் நுட்பங்களைப் பற்றிப் பேசத் தொடங்கும் கட்டுரையின் உயிர்த் துடிப்பு நுஸ்ரத்தின் மறைவோடு நின்றுபோகிறது.


'நான் எடுத்த படம் ஒன்று இருக்கிறது. நுஸ்ரத் சூரியனைப் பார்த்தபடி கண்களைச் சரித்துக்கொண்டு நிற்கிறாள்.... என்னுடைய நிழல் அவள் மீது விழுந்து அந்தப் படத்தில் அவளுடன் இருக்கிறது. நான் இரவு உணவு சாப்பிட்டபோது அவள் அங்கே பாத்ரூமில் நுனிக் காலில் நின்று பிரஷ் பண்ணி, கோணல்மாணலாகத் தலை சீவி, ஒரு புதிய நாளை தொடங்கியிருக்கிறாள். பின்னிரவில் ஒவ்வொரு இலையாக நிலா பட்டு என்னிடம் வந்து சேர்ந்தபோது, அவள் சீருடை போட்டுச், சிவப்பு சொக்ஸ் அணிந்து பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். நான் நிம்மதியாக நித்திரைக் கனவுகளில் திளைத்தபோது அவள் இறந்துவிட்டிருக்கிறாள்.'


அந்தச் சிறுமியின் மறைவு பதேர் பாஞ்சாலியில் துர்காவின் மறைவை நினைவூட்டுகிறது. துர்கா மறைந்தபின் அவள்தான் தன்னுடைய தோழியின் மாலையைத் திருடியிருக்கிறாள் என்பதை அப்பு அறிகிறான். இங்கு நுஸ்ரத் மறைவாள் என்றே எதிர்பார்க்காத முத்துலிங்கம் திருடிவிட்டாள் என்று யூகிக்கிறார். நுஸ்ரத் முத்துலிங்கத்தின் புத்தகத்தை திருடவா செய்தாள்? அந்த மெல்லிய தூசியில் புத்தகத் தட்டுக்கு முன் சிறு பாதச் சுவடுகள் வந்து திரும்பிப்போன தடங்கள் ஒரு திருட்டையா அறிவிக்கின்றன? அளிப்பார்கள் என்று எதிர்பார்த்து, அளிக்க மறந்த தனது பரிசையல்லவா அந்தக் குழந்தை எடுத்துச் சென்றிருக்கிறது.


முத்துலிங்கத்தின் உலகம் நிலத்திலும் பெரிது. நீரிலும் ஆழமானது. அது அவர் உள்ளம் சார்ந்தது. - 'அங்கே இப்ப என்ன நேரம்' நூல் மதிப்புரை - காலச்சுவடு, யூன் 2005.


17) பழனிவேள்

அ.முத்துலிங்கத்தின் மொழியில் இழையோடும் லாவகமான எளிமை சுலபமாகக் கைவரப்பெற்றதாக இருக்காது. வாசக கவன ஈர்ப்புக்காக வருத்திப் பயின்றதும் அன்று. பல்வேறு நாடுகளில், கலாச்சாரத்தில், மக்களோடு கலந்த வாழ்வும், உறவும் ஏற்படுத்தும் தாக்கத்தால் விளைந்த மொழி என்பதனை உணரமுடிகிறது.


இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் புதிதான, புழக்கமில்லாத தமிழ்ச் சொற்கள் வாசிப்பில் சேர்க்கும் அனுபவம் அலாதியானது. ஆனால் வாக்கியங்களில் ஒரு என்ற சொல் தேவையின்றி வருகிறது. தொடர்ச்சியாக ஆங்கில வாசிப்பும் பேசுமொழியின் தாக்கமும் ஏற்படுத்தும் விளைவு என்றே தோன்றுகிறது ( பல எழுத்தாளர்கள் - ஆங்கில வழி கல்வி பெற்றவர்கள் - இப்படித்தான் தமிழில் எழுதுகிறார்கள்.)


வாசிப்பு முடிவில் ஒரு நாவலின் வேறுவேறு அத்தியாயங்களை வாசித்ததுபோன்ற திகைப்பு ஏற்படுமளவு நம்மைத் தொடர்ச்சியாக அழைத்துச் செல்கிறது. இந்த நூல் தமிழ் வாசிப்பு உள்ள அனைவர் வீட்டிலும் பாதுகாக்க வேண்டிய புத்தகம். - 'அங்கே இப்ப என்ன நேரம்' நூல் மதிப்புரை - உயிர்மை, நவம்பர் 2005.


18) எம். கோபாலகிருஷ்ணன்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கிய வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பு கணிசமானது. அவ்வாறான பங்களிப்பை ஈழப்போருக்கு முன், பின் என்று வகுத்துக்கொள்ள முடியும். போருக்குப் பின் 'புலம் பெயர்ந்தோர் இலக்கியம்' என்ற ஒரு வகைப் பாட்டை சுட்டுமளவு, இலங்கையிலிருந்து வெளியேறி வெவ்வேறு உலக நாடுகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சொந்த மண் குறித்த ஏக்கமும், தவிப்பும், போரின் உக்கிரமும், அது சிதைத்தழித்த வாழ்வு குறித்த கண்ணீருமாக இந்த வகை இலக்கியம் வெளிப்பட்டபடி உள்ளது. இந்தப் பின்னணியிலிருந்து அ.முத்துலிங்கத்தின் மொத்த தொகுப்பை அணுகும்போது, இரண்டு விஷயங்களை நினைவில் கொள்வது முக்கியம். ஒன்று : அ.முத்துலிங்கம் இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது எழுத்துக்கள் 'புலம் பெயர்ந்தோர்' என்ற இலக்கிய வகைமைக்குள் அடங்காதது. இரண்டு: அவரது எழுத்துக்கள் சொந்த மண் குறித்த ஏக்கம் அல்லது கவலை அல்லது கனவு என்ற எல்லைக்கு வெளியே இன்னும் விரிவான உலகளாவிய மனித குலம் சார்ந்த அக்கறையைக் கொண்டது.


முத்துலிங்கத்தின் ஒட்டுமொத்தக் கதை உலகமும் பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளைச் சுற்றி அமைந்திருப்பதை உணர முடிகிறது. முத்துலிங்கத்தின் புனைவுலகை கட்டியமைத்துள்ள இந்த மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஆதாரமான கோடாகவும், இத்தொகுப்பின் உட்சரடாகவும் அமைந்திருப்பது உயிர்களின் மீதான கருணை என்னும் அம்சமே. மண்ணின் மீதும், மண்ணுயிர்களின் மீதும், மனிதர்கள் கட்டவிழ்த்து விடுகிற வன்முறை சார்ந்த கவலைகள் முத்துலிங்கத்தின் கதைகளில் துலக்கமாக இடம்பெற்றுள்ளன. யானைகள், உடும்புகள், நாய்கள், பூனைகள், பாம்புகள், பறவைகள் என்று எண்ணற்ற உயிர்களின் மீது மனித சமூகம் தொடர்ந்து புரிந்துகொண்டிருக்கும் பாதகங்களையும், சற்றும் பிரச்சாரத் தொனியின்றி நம் உள்ளுணர்வின் ஆழத்தில் பெரும் வலியாக உணரும் வண்ணம் முத்துலிங்கம் சித்தரித்துள்ளார். இக்கருணையின் ஈரமே சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம், உலகின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் விதவிதமான உயிரினங்களைக் குறித்தும், பறவையினங்களைக் குறித்தும் ஆர்வத்துடன் சொல்லத் தூண்டியுள்ளது. - 'அ. முத்துலிங்கம் கதைகள்' தொகுப்பு நூல் மதிப்புரை - தீராநதி, ஜனவரி 2006.


19) மாலன்

நகைச்சுவை முத்துலிங்கத்திற்கு தண்ணீர் பட்ட பாடு. அல்லது கனடாவில் கடன் அட்டை படும் பாடு. எள்ளல் இல்லை; நக்கல் இல்லை; நையாண்டி இல்லை; மிகைப்படுத்தல் இல்லை. ஆனால் எப்படியாவது சிரிக்க வைத்துவிடுகிறார். அதுவும் எதிர்பாராத தருணத்தில். முத்துலிங்கம் கனடாவில் கார் ஓட்டக் கற்றுக்கொண்ட அனுபவத்தை, ஓர் இரவில் சாப்பாடெல்லாம் முடித்துக்கொண்டு, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, தூங்கப்போகும் முன் மனைவிக்கு படித்துக் காட்டினேன். முறுவலோடு கேட்டுக்கொண்டே வந்தவள் சில வரிகளுக்கு உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள். கண்ணோரத்தில் சிரிப்பின் துளிகள் முத்துக்கட்டி நிற்க அன்று தூங்கிப்போனோம். அதற்கப்புறம் இரண்டு தினங்கள் போயிற்று. மாலை வேளையில் போக்குவரத்து நெரிசலில் சிக்னலுக்காக கார் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று புன்னகைத்தாள். 'என்ன திடீரென்று?' என்று கேட்டேன். 'முத்துலிங்கம் கட்டுரையை நினைத்துக்கொண்டேன்' என்றாள். அந்தச் சிரிப்பு முத்துலிங்கத்திற்கா, அல்லது முன்னால் போன காரோட்டி கார் ஓட்டிய லட்சணத்திற்கா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம்.


அதுதான் முத்துலிங்கத்தின் சிறப்பம்சம். அவரது நகைச்சுவையின் ஊற்றுக்கண்கள் வாழ்க்கையிலிருந்து கிளைத்தவை. அதற்காக இந்தப் புத்தகம் ஏதோ சிரிக்க வைக்கிற நகைச்சுவை தொகுப்பு என்று எண்ணிவிடாதீர்கள். முத்துலிங்கத்தின் வாழ்க்கை அனுபவங்கள், அவர் சந்தித்த மனிதர்கள், எடுத்த பேட்டிகள், அனுபவக் கதைகள், வாசித்த புத்தகங்கள் பற்றிய விமர்சனங்கள், சிந்தனைக்கு வீசும் பொறிகள் என்று அவரையே உரித்துக்கொண்டு வந்திருக்கிறது புத்தகம்.


புத்தகத்தின் மூலம் வாழ்கையை வாசிக்க முடியும் என்பதில் நம்பிக்கை இருந்தால் நீங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம். - 'அங்கே இப்ப என்ன நேரம்' நூல் மதிப்புரை - புதிய பார்வை ஆகஸ்ட் 2005.


20) கனடா தமிழர் தகவல்

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்று, எழுத்துலகின் சிகரங்களில் நிற்பவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் திரு அ . முத்துலிங்கம் ( அப்பாத்துரை முத்துலிங்கம்). 1961ல், இலங்கைத் தினகரன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசைப் பெற்ற 'அக்கா' என்ற கதையின் ஊடாகப் பிரபலமான இவர் கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து எழுதும் எழுத்தாளராக மிளிர்ந்து வருகின்றார். - தமிழர் தகவல் 15வது ஆண்டு மலர், பிப்ரவரி 2006.


நேர்காணல்

மரத்தடி

நிலாச்சாரல்